டிஜிட்டலுக்கு மாறும் உலகம்
இனி எல்லாமே டிஜிட்டல் உலகம் தான். அதில் நாம் முன்னேறுவதைக் குறித்து யோசிப்போம்.
Thursday, December 26, 2019
Wednesday, December 25, 2019
வெந்து கெட்டது முருங்கை - சில மருத்துவப்பழமொழிகள்!
வைகைறைத் துயில் எழு' - இது உடல் நலம் குறித்த பழமொழி. `சூரிய உதயத்துக்கு பின்பும் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் உட்கொள்ளும் உணவு ஆயுளை அதிகரிக்கிறது' - இது உணவு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு சொல்லப்பட்ட பழமொழியாகும். இங்கே உடல் நலம் காக்கும் நோக்கத்தில் நம் முன்னோர் சொல்லி வைத்த உணவு பற்றிய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம்.
மருந்தேயாயினும் விருந்தோடு உண்
அமுதமே ஆனாலும் அதை விருந்தினர்களுடன் சேர்ந்து பகுத்து உண்ண வேண்டும். மாறாக அமுதம் என்பதற்காக தனியாகச் சாப்பிட்டால் அது விஷமாகி விடும் என்பதே அதன் பொருள். அதேநேரத்தில், சிலவகை மருந்துகளை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது என்று வேறு ஒரு பொருளும் சொல்லப்படுகிறது.
நொறுங்கத் தின்றால் நூறு வயது!
நமது பாரம்பர்ய உணவில் புளிப்பு, இனிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய அறுசுவைகள் இடம்பெற்றிருக்கும். இவற்றை அந்தந்த சுவைகளுக்கு ஏற்றதாக அறிவித்து உணரச் செய்வது நாக்கு. இந்த நாக்கின் அடியில் உள் தொண்டைப்பகுதியில் உள்ள தைராய்டானது அறுசுவை உணவின் கலவையை ரத்தத்துக்கு கொண்டு சென்று உணவின் ஏற்றத்தாழ்வை சமப்படுத்தி அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு சேர்க்கிறது. இவை சரிவிகிதமாக கிடைக்க வேண்டுமானால் நாம் உண்ணும் உணவை நன்றாக நொறுங்கும்படி மென்று சாப்பிட வேண்டும் என்பதே அதன் பொருளாகும்.
சுட்ட எண்ணையைத் தொடாதே, வறுத்த பருப்பை விடாதே!
ஒருதடவை சூடாக்கிப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பது சித்த மருத்துவர்களின் அறிவுரையாகும். காரணம் சூடாக்கப்பட்ட எண்ணெயில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்குமாம். அதேநேரத்தில் பருப்பை வறுத்துச் சாப்பிட்டால் அதில் உடலுக்குத் தேவையான புரதச்சத்துகள் இருக்குமாம்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
ஆல மரத்தின் குச்சியை ஆல் என்றும், கருவேல மரத்தின் குச்சியை வேல் என்றும் சொல்வார்கள். இவை இரண்டையும் பயன்படுத்தி பல் துலக்கி வந்தால் அவை பற்களுக்கு உறுதி அளிப்பதுடன் அவை வெண்மையாக இருக்கவும் உதவும். அதேநேரத்தில் உண்மை, நேர்மை போன்ற பண்புகளை வளர்க்கவும் மனித மனம் பண்படவும் நாலடியார், திருக்குறள் போன்ற நூற்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றை நாம் நன்றாக ஆராய்ந்து கற்றுக்கொண்டால் நாம் சொல்லும் சொற்கள் உறுதியானவையாக இருக்கும்.
காட்டிலே புலியும், வீட்டிலே புளியும் ஆளைக் கொல்லும்.
புளிய மரத்தின் புதிய புளியைச் சாப்பிடுவதால் டைபாய்டு, நரம்புவலி, நடுக்கம், வாதம், உடல் பருமன் போன்றவை ஏற்படும். அத்துடன் உடல் பலமிழந்து தலைமுடி நரைத்துவிடும். பழம்புளியை மிதமான அளவு எடுத்து உளுந்து, கடலைப்பருப்பு, கடுகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் காய்ச்சிய புளிக்காய்ச்சலை புதிய சோற்றுடன் கலந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும். அதேபோல் உப்பு, புளி, காரம் சேர்த்த உணவுகளை உண்பதால் நம் உடலில் இருந்து வெளியேறும் துர்வாடை புலியை ஈர்க்கக்கூடியது. ஆகவேதான் உப்பு, புளி, காரம் இல்லாத உணவை ஒருநாளைக்கு ஒருவேளை உண்பதன்மூலம் துர்வாடையும் வீசாது; புலியும் நம்மை நெருங்காது என்பதே இந்தப் பழமொழியின் பொருளாகும்.
வெந்து கெட்டது முருங்கைக்கீரை, வேகாமல் கெட்டது அகத்திக்கீரை!
முருங்கைக்கீரையைச் சமைக்கும்போது நன்றாக வெந்துவிட்டால் அது கசந்துகிடக்கும். மேலும் நன்றாக வெந்த முருங்கைக்கீரையைச் சாப்பிடுவதால் வயிறு இரைந்து பேதியாகி உடலுக்கு கேடு உண்டாகும். ஆகவேதான் முக்கால் வேக்காட்டில் முருங்கைக்கீரையை இறக்கிவிட வேண்டும். அதேநேரத்தில் அகத்திக்கீரையை நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால் கசக்கும்; பேதியையும் ஏற்படுத்தும். மேலும் அதிகம் வேகாத அகத்திக்கீரை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதே இந்தப் பழமொழியின் பொருள்.
- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்