எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது

மாலை வணக்கம் ---

தீதும் நன்றம் பிறர்தர வாரா

சமூகக் குற்றங்களைக் களைவோம்

டிஜிட்டலுக்கு மாறும் உலகம்

இனி எல்லாமே டிஜிட்டல் உலகம் தான். அதில் நாம் முன்னேறுவதைக் குறித்து யோசிப்போம்.

நல்லதை செய்வோம் அதை இன்றே செய்வோம்

Wednesday, May 29, 2013

பனஞ்சோறு சாப்பிட்டிருக்கீங்களா?

பனை என்றதும் ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது தென்னையை விதைச்சவன் தின்னுட்டு சாவான், பனையை விதைச்சவன் பாத்திட்டு சாவான்னு சொல்லுவாங்க. இதோட அர்த்தம் என்னன்னா தென்னை மரத்தை விதைச்சவன் அவனோட வாழ்நாள்ல தென்னை வளர்ந்து தேங்காயை பறிச்சி அதை அனுபவிப்பான். ஆனா பனை விதைச்சவன் அதுல நொங்கு (நுங்கு), பழம் எல்லாம் வர்றதுக்குள்ள அவன் வாழ்நாள் முடிஞ்சிடுமாம்.
எங்க ஊர்ல நிறைய பனைமரம் இருக்கு. எனக்கு பனை ஏறத்தெரியாது, ஆனா தென்னை மரம் ஏறுவேன். திருட்டுத்தனமா தென்னைமரம் ஏறி தேங்காய் பறிச்சி சாப்பிட்டதெல்லாம் தனிகதை. நண்பர்கள் ராத்திரி நேரத்துல பனைமரம் ஏறி நொங்கு வெட்டி போடுவாங்க. மரத்துக்கு கீழே உக்காந்து சாப்பிடுவோம்.
பனைமரத்தை வேரோட வெட்டி சாய்ச்சதும் அதை ரெண்டா பிளந்து போடுவாங்க. அதுக்கு நடுவுல உள்ள பகுதி வெள்ளை, மஞ்சள் கலந்த நிறத்துல இருக்கும். அதை பனஞ்சோறுனு சொல்வாங்க. சாப்பிட நல்லா இருக்கும். அதை சாப்பிடுறதுக்காக காத்துக்கிடப்போம், அதை சவைச்சி (மென்று) சக்கையை துப்பிட்டு சாறை மட்டும் விழுங்கணும். நல்ல டேஸ்டா இருக்கும். இன்னொரு பக்கம் கழுதை நிக்கும். கழுதை விடிய விடிய சாப்பிடும்.
இதை சாப்பிடுறதால என்ன பயன்னு நீங்க கேக்கலாம், பொதுவா பனைவெல்லம் பனங்கற்கண்டுக்கு நிறைய மருத்துவ குணம் இருக்கு. 40 நாள் தொடர்ந்து பதநீர் குடிச்சிட்டு வந்தா மேகநோய் சரியாகும் கள்ளை அளவோட குடிச்சிட்டு வந்தா உடம்புக்கு நல்லது ஆண்மைக்குறை உள்ளவங்க சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும். நொங்கு சாப்பிட்டா வியர்க்குரு வராது. இப்பிடி நிறைய மருத்துவ குணம் இருக்கு.

Thursday, May 23, 2013

பசியைத்தூண்டும் மஞ்சணத்தி... பித்தம் தணிக்கும் வேப்பம்பழ சர்பத்!


நாங்க... சின்ன வயசுல எப்பிடியெல்லாம் இருந்தோம்னு சிலபேரு ஒரு இழுவையைப்போட்டு பராக்கிரமத்தை சொல்வாங்க. அதுல சிலது உண்மையா இருக்கும், சிலது கதையாவும் இருக்கும். இங்கே சில நிதர்சனங்களை சொல்ல விரும்புறேன். திருநெல்வேலி மாவட்டத்துல பீடிக்கு பேர்போன ஊரான முக்கூடல்ங்கிற ஊருக்குப்பக்கத்துல என் ஊரு இருக்கு. மரங்கள் நிறைய இருக்கும். அதுவும் என் தாத்தா காலத்துல வீட்டைச்சுத்தி ஒரே மரமா இருக்கும். வெயில் காலத்துல வேப்ப மரத்துல ஏறி வேப்பம்பழத்தை பறிச்சி சாப்பிடுவோம். விளையாட்டுத்தனமா சாப்பிடுவோம், அவ்வளவுதான்! (ஏல (வேப்பம்பழத்தை) ரொம்ப சாப்பிடாத... கண்வலி வந்திரும்னு பெரியவங்க சொல்வாங்க, அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுதானே?)
வேப்பம்பழத்தோட விதை வேப்பமுத்து. இந்த விதை நல்ல விலைக்கு போகும். அதனால விதையை பொறுக்கி மொத்தமா சேர்த்து விப்போம். கைச்செலவுக்கு ஆகுறதோட ஜூன் மாசம் பள்ளிக்கூடம் போகும்போது நோட்டு புத்தகம் வாங்குறதும் பணம் சேரும்.
வேப்பம்பழத்தை சர்பத் செஞ்சி சாப்பிட்டா பித்தம் தணியும், ரத்தத்தை சுத்திகரிக்கும். கொஞ்சநாள் தொடர்ந்து சாப்பிட்டா சொறி சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள் சரியாகும்.
வேப்பம்பழம் மாதிரியே மஞ்சணத்தி பழத்தையும் சாப்பிடுவோம். அது கோழிப்பீ (கோழியோட கழிவு) மாதிரி இருக்கும், வாசனைகூட அப்பிடித்தான் இருக்கும். இந்த மாதிரி பழங்களை இப்ப உள்ள பிள்ளைங்க சாப்பிட மாட்டாங்க. இப்போ நோனினு சொல்லி விக்கிறாங்களே... அதோட குடும்பம்தான் இந்த நுணானு சொல்லக்கூடிய மஞ்சணத்தி.
இது பசியை வரவழைக்கிறதோட உடல்ல வெப்பத்தை தணிச்சி மாந்தத்தை போக்கி கல்லீரல், மண்ணீரல் கோளாறையெல்லாம் சரி பண்ணும். அதேமாதிரி நுணாக்காய்ல பல்பொடி செஞ்சி தேய்ச்சா பல் பளிச்னு இருக்கும். அதோட பல் அரணை, வீக்கம், ரத்தக்கசிவு எல்லாம் சரியாகும். நான் மூணு மாசத்துக்கு முன்னாடி இந்த நுணாக்காயை (மஞ்சணத்தி) தேடி கண்டுபிடிச்சி ஒரு கிலோ அளவுக்கு பறிச்சிட்டு வந்து பல்பொடியாக்கி நிறையபேருக்கு கொடுத்தேன். நானும் என் வீட்டுல என் பிள்ளைங்கள பயன்படுத்தச்சொன்னேன். தேவைப்பட்டா நான் செஞ்சி தர தயாராயிருக்கேன்.

நீரிழிவு நீக்கும் சரக்கொன்றை!

இயற்கையோட வினோதத்தை நேத்து சொல்லியிருந்தேன். இன்னைக்கு ஒரு வினோதம் சொல்றேன் (இதெல்லாம் ஒரு வினோதமாப்பான்னு நீங்க சொல்றது என் காதுல கேக்குது). இன்னைக்கி நான் சொல்லப்போறது சரக்கொன்றை பற்றி... இதை சித்திரைப்பூன்னு சொல்வாங்க. நான் வசிக்கிற மாதவரம் பால்பண்ணை பகுதியில ஒரு சரக்கொன்றை மரம் இருக்கு வழக்கமா சித்திரை மாசத்துல அந்த மரத்துல பூ பூத்துக்குலுங்கும், ஆனா இந்த மே தொடக்கத்துல அந்த மரம் மொட்டை மரமா இருந்திச்சி. ஆனா மே மாசம் நடுவுல... அதாவது சித்திரையில பூ பூத்தது, கூடவே இலைகளும் தளிர் விட்டிச்சி. இப்போ மரம் இலைகளும், பூவுமா ரம்மியமா இருக்கு.
இந்த சரக்கொன்றையோட அம்மா கொன்றை. அதோட வம்சத்துல சிறுகொன்றை, செங்கொன்றை, மயில்கொன்றைனு நிறையபேர் இருக்காங்க. உலகம் முழுக்க இந்த கொன்றையோட ஆதிக்கம் உண்டு. கொன்றை மலர் பத்தி நம்ம தமிழ் இலக்கியத்துல நிறையவே சொல்லியிருக்காங்க! கொன்றை மலர் சூடினு ஒரு பாட்டு பாடப்புத்தகத்துல படிச்சிருப்போம். சிவனோட செஞ்சடையில இந்த கொன்றை மலரைத்தான் அணிஞ்சிருந்தாராம்.
சரி விஷயத்துக்கு வருவோம். சரக்கொன்றை பூவையும் இளம்கொழுந்தையும் துவையல் செஞ்சி சாப்பிடலாம், பூவை கஷாயம் செஞ்சி சாப்பிடலாம் இப்பிடி சாப்பிட்டு வந்தா சர்க்கரை வியாதி சரியாகும் கூடவே வயித்துக்கோளாறு, மேகக்கோளாறும் சரியாகும். சரக்கொன்றை காய் புளியம்பழம் மாதிரி ஆனா... நீளமா இருக்கும் அதுக்குள்ளே உள்ள சதைப்பற்றை வாம சமையல்ல சேர்க்கிற புளி கூட சேர்த்து பயன்படுத்தினா பித்தம் சரியாகும். குழந்தைங்க, கர்ப்பிணி பொண்ணுங்க சாப்பிட்டா மலப்பிரச்சினை சரியாகும். இன்னும் நிறைய இருக்கு.

Wednesday, May 22, 2013

குழந்தைப்பேறு தரும் அரச மரம்...

தென்கச்சி அண்ணாச்சி சொன்னமாதிரி தினம் ஒரு தகவல் சொல்றதா சொன்னேன். இதோ இன்றைய தகவல்!
இயற்கை மாற்றமெல்லாம் வினோதமா இருக்கும். அதை அனுபவிச்சி பார்த்தாதான் தெரியும். நானும் இதுவரை அந்த வினோதத்தை பெருசா உணரல.. இப்போ வாய்ப்பு கிடைச்ச‌து, பார்த்தேன் வியந்தேன்.
ஏப்ரல் கடைசி மே தொடக்கத்துல நிறைய‌ அரச மரங்கள் இலை உதிர்ந்துபோய் மொட்டை மரமா நின்ன‌து. பிறகு சில நாட்கள்ல இலை துளிர்த்து இளம்பச்சையா இருந்திச்சி. இப்போ அந்த இலையெல்லாம் பச்சை பசேல்னு வளர்ந்திருக்கு. சில மரங்கள்ல‌ காய் காய்ச்சி பழமாகியிருக்கு. என்னடா இது வினோதம்னு நீங்க நினைக்கலாம். இதுக்குள்ள நிறைய விஷயங்கள் இருக்கு..... நான் அதுக்குள்ள போகலை. இலை துளிர்த்ததா சொன்னேனே! அந்த பசுமையான இலைகளைத்தேடி நான் அலைஞ்சிருக்கேன். ஏன்னு கேக்கிறீங்களா? சொல்றேன்... ஆண்மைக்குறை போக்குறதோட குழந்தைப்பேறு தரக்கூடிய‌ அற்புத மருந்து அந்த இளம்தளிர் இலைகள்.
இப்போவெல்லாம் குழந்தை இல்லாம சிரமப்படுறவங்களை அதிகமா பார்க்க‌ முடியுது. (உணவுமுறை, உடல் உழைப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.) குழந்தையில்லாம கஷ்டப்படுறவங்க இந்த இளம்தளிர் இலைகளை தயிர் சேர்த்து அரைச்சி காலையில‌ வெறும் வயித்துல‌ 48 நாள் சாப்பிட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும். ஆண், பெண் ரெண்டு பேருமே சாப்பிடணும். இந்த காலகட்டத்துல‌ உறவு வேண்டாம்.. 48 நாள் ஆனாதான் நல்ல பலன் கிடைக்கும்... ஆமா சொல்லிப்புட்டேன்.
இதை வச்சிதான் ஒரு பழமொழி சொல்வாங்க. அரசனை நம்பி புருஷனை கைவிடாதே!
இது நாம தவறா புரிஞ்சிக்கிட்ட‌ பழமொழி, ''அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே'னு சொல்றது.
ஒரு மனைவிக்கு அறிவுரை சொல்றதா அமைஞ்சிருக்கு. இதோட‌ விரிவான அர்த்தம் என்னன்னா?
''ஏ பெண்ணே! அரசன் எல்லா வளங்களும் நிரம்பியவன்; அதிகாரமும், ஆர்ப்பாட்டமும், ஆடம்பரமும் உடையவனாய்ப் பரிவாரங்கள் புடைசூழப் பெருமிதத்துடன் வாழ்கிறான். அவனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், உன் கணவன் வசதிக் குறைவுடன் எளிய வாழ்வு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பவனாய்த் தோன்றும். ஆகையால், நீ ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு சோகத்துடன் காலம் தள்ளாதே. அரசனை அணுகும் வாய்ப்புக் கிட்டினால் அவனுடைய ஆசை வார்த்தைகளை நம்பிப் புருஷனைப் புறக்கணித்து விடாதே!''

இப்படி அர்த்தப்படுத்திக்கிட்டுதான் ஒரு கவிஞர் பழைய படத்துல‌ பாட்டு எழுதியிருந்திருந்தார்.
இப்படிப் பொருள் கொள்ற‌து, பெண்ணை இழிவுபடுத்துது; அவளின் கற்பையே சந்தேக‌ப்பட வைக்கிற‌து; கணவனுக்குத் துரோகம் செய்யக் கூடியவள் அவள் என்ற கருத்தைத் தருகிறது.

இங்கே நாம் சொல்ல வர்றது என்னன்னா... அரசன்னா மன்னனைக் குறிக்கலை; மரத்தைச் குறிக்குது.
குழந்தைப்பேறு இல்லாத மனைவி, அரச மரத்தைப் பல நாள் சுத்தி வந்தா கருத்தரிக்கும்கிறது நம்பிக்கை.
அரச இலையை சாப்பிட்டாதான் பலன் கிடைக்கும்னு இல்லை. இந்துக்கோவில்கள்ல‌ உள்ள அரச மரத்தை பொண்ணுங்க‌ சுத்தி வந்தாலே அதோட‌ காத்து பட்டு பொண்ணுங்களோட‌ கருப்பைக்கோளாறு நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்னு சொல்றாங்க..
ஆக அரச மரத்துக்கு எவ்வளவு சக்தி இருக்குது பார்த்தீங்களா?

Tuesday, May 21, 2013

பாரம்பரிய மருத்துவ தகவல்


வணக்கம். அகில இந்திய வானொலி புகழ் தென்கச்சி சுவாமிநாதன் சார் சொன்ன மாதிரி நானும் இன்று ஒரு தகவல் சொல்லலாம்னு நினைக்கிறேன். இதுல ஒரு சின்ன திருத்தம்... தினம் தினம் நமது 'பாரம்பரிய மருத்துவ தகவல்'னு திருத்திக்கோங்க அன்பர்களே!
அறிவியல் வளர்ச்சியால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் நிறைய நிகழ்ந்து வருகின்றபோதிலும் அழிவுகள்... குறிப்பாக புதிதுபுதிதாக நோய்கள் வந்து மனிதர்களை பாடாய்படுத்தி வருகிறது. ஆனாலும் மனுஷன் போராடி அதில வெற்றியும், தோல்வியும் அடைஞ்சுட்டுருக்கான்.
நான், எனக்கு வந்த நோய் மற்றும் குறைபாடுகளுக்கு செய்து கொண்ட வைத்தியம் செஞ்சிக்குவேன். அதை சொல்றேன், அதோட பலனை நீங்களும் அனுபவியுங்க!
இது வெயில் காலம். வெயில்ல அலைஞ்சு திரிஞ்சுட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே ஐஸ்வாட்டரை ‘மடக் மடக்’குனு குடிக்கிறவங்க நிறையபேர் இருக்கிறாங்க. இப்பிடி குடிக்கிறதால சிலருக்கு ஒண்ணும் செய்யாது. ஒருசிலருக்கு கிண்ணுனு தலையில பிடிக்கும், கொஞ்சநேரத்துல தலைவலி, தொண்டை கரகரப்பு, தும்மல் வந்து ஜலதோஷம் ஆரம்பிக்கும். ஜலதோஷம் இப்பிடி ஐஸ்வாட்டரை குடிக்கிறதுனாலதான் வரும்னு சொல்ல முடியாது. எந்த வழியிலயும் வரலாம். தயிர், மோர் சாப்பிடுறதுனாலயும், ஜூஸ் குடிக்கிறதுனாலயும், மழையில நனையிறதுனாலயும், பூசணிக்காய் சாப்பிடுறதுனாலயும்கூட சிலபேருக்கு ஜலதோஷம் வரலாம். எதுஎப்படியோ? ஜலதோஷம் வர்றதுக்கான அறிகுறி தெரிஞ்சவுடனே பொறுக்குற சூட்டுல உள்ள வெந்நீரை (சுடுதண்ணி) குடிச்சாலே போதும். ஜலதோஷம் பிடிக்காது. அதையும்மீறி வந்துட்டா மணத்தக்காளி கீரை சூப் குடிங்க. லேசா தொண்டை கரகரப்பு இருந்தா வெதுவெதுப்பான தண்ணியில கல் உப்பை போட்டு கலந்து தொண்டை கொப்புளிங்க. காலையில கண்முழிச்சதும் செய்யுங்க, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடியும் செய்யுங்க போதும்.
அதுவே சளியா மாறிட்டா ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி பூண்டுப்பால் குடியுங்க. அதை எப்படி செய்றது... 50 மில்லி பால், அதே அளவு தண்ணி, 10, 12 பூண்டுப்பல் சேர்த்து கொதிக்க வையுங்க. பூண்டு வெந்ததும் 10 மிளகை பொடி பண்ணி போடுங்க. கூடவே மஞ்சள் தூள் சேர்த்துக்கோங்க. கடைசியா பனங்கற்கண்டு சேர்த்து சூடு ஆறினதும் பருப்பு கடையுற மத்து மூலமா கடைஞ்சி குடியுங்க. பகல் உணவுல தூதுவேளை துவையல், சின்ன வெங்காயம் சேர்த்துக்கோங்க, சரியாகிடும்